புதன், 12 ஜனவரி, 2011

நவீன இலக்கிய  புனைவுகளில்
உருவ உள்ளடக்க சொல்லாடல்கள்”
-    சில அவதானிப்புக்கள் -

- சின்னராஜா விமலன் -

இலக்கியம் என்பது சமூக மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான விளைபொருள். அதன் ஊடுபாவாக சமூகத்தில் நிலவுகின்ற பிரச்சினைகளை இனங்காட்டி அவற்றிற்கான தீர்வையும் மக்களை இலகுவில் சென்று அடையக் கூடியவகையில் முன்வைக்கும் சந்தர்ப்பத்தில் அவ்விலக்கியமானது தான் எட்ட நினைத்த இலக்கினை அடைந்த திருப்தியை அதைப் படைத்தளித்த இலக்கியகர்த்தாவுக்கு ஏற்படுத்துகின்றது. குறிப்பாக புனைவு இலக்கியத்தைப் பொறுத்தவரையில் “கலை கலைக்காகவே” என்ற கோட்பாட்டின் வழியான புரிதலை நிராகரித்து “கலை மக்களுக்காகவே” என்ற கொள்கை ரீதியிலான அணுகுமுறையை கையாளும்போதே அது பரந்த வாசகர் மட்டத்தை எட்டுவதற்கான திறவுகோலாக அமையும். அவ்வாறானதொரு நிலை நோக்கி புனைகதை இலக்கியத்தை நகர்த்திச் செல்வதற்கான மூலோபாயங்களில் மக்களை இலகுவில் கவர்ந்திழுக்கும் படியான வடிவ உத்திகளை கையாளுதல் தலையாய விடயம்.
அந்நியக் கலை இலக்கியத் தாக்கத்தின் விளைவுகளாக எமக்கு கிடைத்தவையே நாவல், சிறுகதை போன்ற புனைகதை இலக்கிய வடிவங்கள்.உண்மையில் புனைகதை இலக்கியத்தில் வடிவம் குறித்த சில அடிப்படை சந்தேகங்களே இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளன. அதாவது நவீன புனைவு இலக்கியத்தில் வடிவம் என்பது கவிதை, சிறுகதை,நாவல் போன்றவற்றை குறித்து நிற்கின்றதா? அல்லது ஒரு சிறுகதை யையோ,நாவலையோ எழுதி முடிப்பதற்காக ஒரு எழுத்தாளரால் கையாளப்படும் உத்திமுறைத் தெரிவான எடுப்பு,தொடுப்பு,முடிப்பு என்பவற்றின் முழுமையையும் உள்ளடக்கிய வெளிப்படுத்துகையினை குறித்து நிற்கிறதா? இது ஒரு விரிசிந்தனை க்கான தளத்தில் தனியே ஆராயப்பட வேணண்டிய விடயம். இக்கட்டுரை யானது வடிவம் என்பது கவிதை, சிறுகதை,நாவல் போன்றவற்றை குறிப்பதான பார்வையில் எழுதப்படுகிறது.

ஒரு கலைப்படைப்பின் வடிவ நிர்ணயிப்பில் பங்காற்றும் அம்சங்களாக கீழ்வரும் ஆறினை குறிப்பிடுகின்றார் “தமிழ் சிறுகதைகளில் உருவம்” என்ற நூலின் ஆசிரியரான கோ.கேசவன்.
1. கலைப்படைப்பின் உள்ளீடு திறன்கள், அதாவது அதன் உள்ளடக்கம்.
2. வர்க்க மனநிலை, அதாவது கலைஞனின் வர்க்க மனநிலை, கலைஞன் காட்டும் பாத்திரங்களின் மனநிலை.
3. அந்நியக் கலை இலக்கியத்தின் தாக்கம்.
4. பண்டைய மரபுகளின் செல்வாக்கும் அவற்றிலிருந்து விடுபடத்துடிக்கும் முயற்சியும்.
5. கலைஞனின் பயிற்சி – பழக்கம், அவனது ஆழ்ந்த மனக்கிளர்ச்சி.
6. நுகர்வோர் தளத்தின் தரவேறுபாடு.

இதில் கேசவன் கூறும் பண்டைய மரபுகளின் செல்வாக்கும் அவற்றிலிருந்து விடுபடத் துடிக்கும் முயற்சியும் என்பதனை வகைமாதிரிக்கு எடுத்து நோக்குவோமாயின் பண்டிதர்களிடம் சிறைப்பட்டிருந்த தமிழ் கவிதை பாரம்பரியத்தை சிந்து, தெம்மாங்கு, காவடி முதலான இலகுநிலை வடிவமாற்றங்களின் மூலம் மக்களின் இருப்பிடம் நோக்கிய ஒரு அசைவியக்கமாக நிகழ்த்திக் காட்டினான் பாரதி. இவ்விடத்தில் எந்த வடிவமும் அதற்கு முந்தைய எந்த வடிவத்திற்கும் மாற்று என்று எண்ணாமல் அம்மொழி வடிவங்களுள் இன்னொன்றான புதிய வரவு எனக்கொண்டால் மரபுவாதிகளும், நவீனத்துவவாதிகளும் தேவையற்ற முரண்பாட்டு உருவாக்கங்களை தவிர்த்துக்கொள்ள முடியும்.

இவ்வாறே கவிதை தவிர்ந்த நவீன இலக்கிய புனைவுகளில் “கல்கி” போன்றவர்கள் பரந்துபட்ட மக்களுக்கும் புரியும்படியான வடிவமொன்றை கைவரப் பெற்றாலும் அவரின் உள்ளடக்கம் சார்ந்த அம்சங்களில் விமர்சகர்களின் பார்வை ஒருவித நிராகரிப்பின் அடியான, சாடல் மிகுந்ததாகவே இருந்து வந்துள்ளது. இதன் நீட்சி இன்றுவரை பல்வேறு பரிமாணமாய் படைப்பாளிகளுக்கும் விமர்சகர்களுக்கும் இடையே இருவேறுபட்ட கருத்து முரண்வெளிகளை அதிகரித்துக் கொண்டிருக்கின்றமை கண்கூடு. அதாவது சொல்ல வந்த விடயத்தை எவ்வடிவத்தின் ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்பதிலும் இஸங்;களின் வழியான உள்ளடக்கத்தை வெளிக்கொணர்வதில் ஏற்பட்ட புரிதல் இன்மைகள் மற்றும் முரண்பாடுகள் என்பவை சர்ச்சைகளை தோற்றுவித்து உருவ உள்ளடக்க விவாதங்களை இன்றும் அரங்கேற்றிய வண்ணமே உள்ளன.
படைப்பாளிகளை மட்டுமல்லாமல் உருவ உள்ளடக்கத்தின் வகிபங்குகள் சிற்றிதழ்களிலும் தாக்கத்தை உண்டுபண்ணத் தவறவில்லை. இவ்வகைப்பட்ட சிற்றிதழ் போக்கிற்கு உதாரணமாய் சி.சு.செல்லப்பாவின் “எழுத்து” இதழ் உருவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்ததால் உருவவாத இதழாக முத்திரை குத்தப்பட்டதாகக் கூறுவர்.

ஒருவகையில் நவீன இலக்கியப் புனைவு சம்பந்தமான உருவ, உள்ளடக்க சர்ச்சைகள் இலக்கிய உலகில் புதுப்பொலிவைப் பெற உதவியது என்பது வாஸ்தவமே. இதனை உள்வாங்கி படைப்பாளிகள் நவீன இலக்கியப் புனைவுகளில் புதியதோர் திருப்புமுனையை ஏற்படுத்தியதை வரமாகக் கொண்டாலும், நேர்கோட்டில் ஒற்றைப் பரிமாணமாய் கதை சொல்வதை விரும்பாத எழுத்தாளர்கள் படிமத்தை குவியலாகப் பயன்படுத்தி வாசக நுகர்வுத் தளத்தை அல்லாட வைப்பதை சாபம் என்பதைத் தவிர வேறு எப்படி கூற முடியும்?
இலக்கிய உலகில் இன்றும் புரியாத புதிராக விளங்கும் மௌனியின் சிறுகதைகளை க.நா.சு, வெங்கட் சாமிநாதன், பிரமிள் போன்றவர்கள் உச்சமெனக் கொண்டாடி இருந்தாலும்;, பெரும்பான்மையான வாசகர்களின் மனங்களில் இருண்மைத்தன்மையின் இருப்பிடமாகவே அவரின் படைப்புக்கள் குடிகொண்டிருந்தன. அ.மார்க்ஸ் “மௌனியிடம் எப்போதுமே என்னால் ஒன்ற முடிந்ததில்லை” எனக்கூறுவதற்கும் மௌனியின் சிறுகதைகளில் கையாளப்பட்ட உள்ளடக்கமே காரணமாகிறது. எழுத்தாளர் நகுலன் “எழுத்தாளர்களின் எழுத்தாளர்” என்று அழைக்கப்படுவதற்கும் அவருடைய படைப்பின் உள்ளடக்கம் சீரிய எழுத்தில் ஆர்வம் கொண்டோரால் மாத்திரம் அணுகப்படுவதன் பிரதிபலிப்பினால் ஆகும்.
அதேசமயம் கோணங்கி போன்றவர்கள் வாக்கிய வடிவங்கள் நேரடியானதாக இல்லாமல் அது சிதையும் போதுதான் ஒரு கவிதைக்கான சாத்தியப்பாடு ஏற்படுகிறது என்று கருதினார்கள். இதனால் புரியாமலே போய்விடக்கூடிய எழுத்து உருவாகிற ஆபத்து அதில் இருந்தாலும்கூட அந்த ஆபத்தை எதிர்கொண்டு பயணிக்கலாம், அதுதான் உண்மையான இலக்கியம் என்றும் சொன்னார்கள். இவ்விடத்தில் “ஏழiஉiபெ கழடமடழசந”இ “குழடமடழசந யள னளைஉழரசளந” ஆகிய நூல்களின் ஆசிரியரான எம்.டி முத்துக்குமாரசாமி; வடிவம் என்பதை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதனை கீழ்வருமாறு குறிப்பிடுவது கவனிப்புக்குரியது.

“ஒரு ஒட்டுமொத்த வடிவங்களாக மட்டுமல்ல, அதை ஒரு வாக்கியத்தினுடைய வடிவமாகக்கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். ஒரு வாக்கியத்தினுடைய வடிவமாக இருந்தாலும்சரி, ஒரு சொற்கோர்வையினுடைய வடிவமாக இருந்தாலும்சரி, ஒரு முழுப்படைப்பினுடைய வடிவமாக இருந்தாலும் சரி அந்த வடிவம் என்பது ரொம்ப முக்கியமானது. வாக்கிய அளவில் செய்யக்கூடிய சிதைவு இருக்கிறதே அது ஓர் அளவுக்குத்தான் உண்மையாக இருக்க முடியும்.அது கவிதையினுடைய வடிவத்திற்கு மட்டுமே சரியானது. சிறுகதைக்கோ, நாவலுக்கோ அது சரியானதல்ல.
- தீராநதி, ஜூலை 2007 -

ஆனாலும் இன்றைய காலப்பகுதியில் பின் நவீனத்துவத்தின் கட்டுடைப்பால் வடிவம் சார்ந்த பிரக்ஞையில் பின் நவீனத்துவவாதிகள் அதிகம் கவலை கொள்வதில்லை என்கிற யதார்த்த ரீதியான பிரசன்னத்தை அட்டவணைகள், புள்ளிவிபரங்கள் மூலமான புனைகதை வெளிப்படுகை முறைகள் எடுத்துக்காட்டுகின்றன.

வித்தியாசமான வாசிப்பனுபவத்தை தருவதான எண்ணப்பாங்கில் வரன் முறையான தளத்திலிருந்து விலகி இன்றைய நவீன புனைவு இலக்கியம் தறிகெட்டு போவதான உணர்வை இது வாசகர்கள் மத்தியில் வலுப்பெற வைத்துள்ளது.

ஒரு படைப்பாளி ஒரேயொரு நவீன இலக்கியப் புனைவுத்துறையில் மட்டும் அது கவிதையாகட்டும், சிறுகதையாகட்டும், நாவலாகட்டும் ஒன்றில் துறைபோர்ந்தவராக மிளிரும் சந்தர்ப்பத்தில் வடிவநிலைத் தெரிவு குறித்த சமுசயத்திற்கு இடமில்லாது போய்விடுகின்றது. ஆனால் ஒரு பல்துறை சார்ந்த இலக்கியகர்;த்தா படைப்பூக்க உந்தலினாலான மனோநிலைக்கு இயைபடைந்து வருகின்ற பொழுது அந்த விடயத்தை எந்தவொரு வடிவத்தினூடாக வெளிக்கொணர்ந்தால் படைப்பின் முழுமையும் பாதிப்புறாவண்ணம் சிருஷ்டிக்க முடியும் என்பதனை ஆளுமை மிக்க படைப்பாளியினால் அதனை இலகுவாக உய்த்துணர முடியும். இதற்கு அவருடைய எழுத்துலக அனுபவம் கைகொடுக்கின்றது.

இருப்பினும் சிறுகதை படைப்பொன்றை சிருஷ்டித்த ஓர் எழுத்தாளன் பிற்பட அதனை ஒரு குறுநாவலாகவோ அல்லது நாவலாகவோ வடிவ மாற்றத்திற்கு உட்படுத்தும் பொழுது வடிவத்தை தீர்மானிப்பதில் அந்தப் படைப்பாளி தவறு செய்து விட்டாரா என்றதொரு முடிவுக்கு வர முடியுமா? ஏற்கனவே படைத்தளித்த சிறுகதையின் கருவைக் கொண்டு அதனை திறம்பட வளர்த்திச்செல்லும் லாவகமும், புதிய உருவார்ப்பும் அதன் ஊடாட்டமாக வாசகர் மத்தியில் ஒரு அனுபவத்தொற்றலை ஏற்படுத்த முடியுமாக அந்தப் படைப்பாளி கருதுமிடத்து சிறுகதையொன்று குறுநாவலாகவோ, நாவலாகவோ பரிமாணம் பெறுவதை தடுக்க முடியாது என்றே தோன்றுகின்றது.

அவ்வாறே ஒரு கவிஞரால் எழுதப்படும் சில கவிதைகள் ஒரே தலைப்பில் ஐஇ ஐஐஇ ஐஐஐ என வௌ;வேறுபட்ட காலப்பகுதியில் வெளிவருகின்ற பொழுதும் வடிவம் பற்றிய சர்ச்சை எழுகின்றது. தமிழக கவிஞரான சுகுமாரன் தான் “ஒரு பாடுபொருளில் ஒரு கவிதை எழுதினால் திரும்பவும் அப்பாடுபொருளில் கவிதை படைக்க மாட்டேன்” என்று கூறியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இது விவாதத்திற்குரியதொன்றாகவே படுகின்றது. ஒரு வகையில் இது அவரின் பாடுபொருள் பற்றாக்குறையின்மை தன்மையை வெளிப்படுத்துவதாக கருதினாலும் இன்னொரு புறம் மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நியதிக்கிணங்க காலப்போக்கில் பாடுபொருளின் இயல்புகளும் மாறக்கூடும். அத்துடன் கவிஞனும் தன்னை சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தும் சமயத்தில் அப்பாடுபொருள் மீதான பார்வையும் பன்முகப்படுத்தப்படலாம்.

பா. அகிலனின் “தேனீரின் இறுதித்துளியை பகிர்ந்தாய்” எனத் தொடங்கும் யாத்திரை ஐஇ “அச்சத்தால் தறையப்பட்டிருந்தேன்” எனத்தொடங்கும் யாத்திரை ஐஐ, “சொப்பனத்துள்ளும் அச்சம்” எனத்தொடங்கும் யாத்திரை ஐஐஐ ஆகிய கவிதைப் பிரதிகளை படிக்கும் பொழுது லா.ச.ரா சொன்னாரே “ஒரே கதையைத்தான் நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன்” என்பது போல பா. அகிலனும் “பலவேளைகளில் ஒன்றையே திரும்பத் திரும்ப நான் எழுதுவதாகப்படுகிறது” என அவரின் “பதுங்குகுழி நாட்கள்” கவிதைத் தொகுப்பில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது இக்கட்டுரையின் மையத்தை நோக்க்pய பயணிப்புக்கு துணைபுரிகிறது.
மறுதலையாய் நோக்கும் போது ஒரு பாடுபொருள் பற்றி ஒரு கவிதை எழுதிய பின்னர் அந்தப் படைப்பை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாமோ என்றதொரு ஆதங்கம் படைப்பாளியிடம் மேலிடும் பொழுது இவ்வாறான கவிதைகள் தோற்றம் பெறக்கூடும். திருப்தியின்மைக்கும் கலைக்குமான தொடர்பு என்றும் போராட்டம் மிகுந்ததாகவே காணப்படுவது இதற்கு அடிப்படையாய் விளங்கலாம். ஆனாலும் ஒரு படைப்பு என்பது காலம் காலமாக ஒவ்வொரு காலகட்டத்திற்கும் வௌ;வேறு விதமான அர்த்தங்களை தரக்கூடியதாக இருப்பதனால் இவ்வாறான கவிதைகளின் தொடர்வருகை விவாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருந்து கொண்டே இருக்கும். எது எவ்வாறிருப்பினும் இன்றைய காலகட்டத்தில் ஒரு கவிஞரைப் பின்பற்றி ஏனைய கவிஞர்களும் அவரை ஆதர்ஸமாக கொண்டு அவரின் பாணியில் இவ்வாறான கவிதைகளைப் படைப்பதும் வழக்கமாகி விட்டது.

சமூகத்தில் தன்னை பாதித்த விடயங்களை, பதிவு செய்ய விரும்புபவற்றை ஒரு எழுத்தாளன் தனக்கு வாய்த்த மொழியில் எழுத முற்படுகின்றான். இதன்போது ஒரே அனுபவத்தை இருவேறு வடிவங்களில் வெளிக்கொணரும் போது அது படைப்பாளியின் பலவீனத்தை வெளிச்சம் போட்டு காட்டுவதாகவே கருத வேண்டியுள்ளது. அண்மையில் ஞானம் இதழில் வெளியான வீ. ஜீவகுமாரன் என்பவர் எழுதிய “கிராமத்து பெரிய வீட்டுக்காரி” சிறுகதை தந்த வாசிப்பு அனுபவமும், ஏற்கனவே அவரால் வெளியிடப்பட்ட “யாவும் கற்பனை அல்ல” தொகுப்பில் வெளிவந்த “கிராமத்து வீடும் என் முதல் காதலியும்” கவிதை தந்த வாசிப்பு அனுபவமும் ஒன்றாக இருப்பதை தேர்ந்த வாசகனால் உணரமுடியும்.
இவற்றை தொகுத்து பார்க்கின்ற பொழுது ஒரு சமயம் “ஈழத்திலக்கியம்” பற்றி ஜெயமோகன் கூறிய “தவறான கருவியால் (யதார்த்த வாதத்தால்) இலங்கை வாழ்வையள்ள படைப்பாளிகள் முயலும் போது திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான பௌதீகவாழ்வே அகப்படுகின்றது. விளைவாக பல படைப்புகள் முதல் சில பக்கங்களிலேயே அலுப்புத்தருகின்றன” என்ற கலாநிதி ந. ரவீந்திரன் உட்பட பலரின் விமர்சனத்திற்கும் ஆளான கூற்று நினைவுக்கு வருகின்றது. வௌ;வேறு ஈழத்துப் படைப்பாளிகளின் படைப்புக்களை படிக்கும்போதே ஒரேவிதமான அனுபவத்தொற்றலுக்கு உள்ளாகி அலுப்பு ஏற்படுகையில், ஒரு படைப்பாளியின் இரண்டு வௌ;வேறு வடிவநிலைப் புதினங்களில் ஒரே அனுபவம் கருப்பொருளாகும் பொழுது ஜெயமோகனின் கூற்றை ஆமோதிக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகவே எனக்குப் படுகின்றது.

1 கருத்து: